மும்பை: மக்களவை தேர்தலுக்கு முன்பு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சிக்க வைக்க பாஜ அரசு முயற்சிக்கிறது என்று சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பேரத்தில் இடைத்தரகராக இருந்த கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைதாகி நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார். மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. மைக்கேலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயர்களை குறிப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்தி இந்தியா கொண்டு வந்த சமயத்தில் ஐந்து மாநில தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது. அப்போது பொதுக்கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மைக்கேலிடம் நடத்தப்படும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்றார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று இப்போதுதான் தெரிகிறது.
மைக்கேலுக்கு எதிரான விசாரணை தொடங்கும் முன்னரே காந்தி குடும்பத்தின் மீது மோடி குற்றம்சாட்டியதால் விசாரணை எப்படி நடக்கும் என்பது ஏற்கனவே முடிவாகி விட்டது. மைக்கேலை நாடு கடத்தி கொண்டு வந்தும்கூட ஐந்து மாநில தேர்தலில் பாஜ தோற்றுப்போனது. இனி மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மையாக இருந்தால் குற்றவாளிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் சோனியா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களின் பெயரை மைக்கேல் குறிப்பிட்டார் என்பதற்காக ரபேல் விமான பேர ஊழலை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ரபேல் விமான பேரத்திலும் அம்பானி பெயரை பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி